உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும் நாளையும் கனமழை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இன்றும் நாளையும் கனமழை 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை:வளிமண்டல சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. லட்சத்தீவு மற்றும் கேரள பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, படிப்படியாக வலுவடைந்து, இன்று அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகலாம். அதன்பின், புயல் சின்னமாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பருவமழை முன்னரே துவங்க வாய்ப்பு

கடந்த ஜூன் மாதம் துவங்கிய, தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிர மாநிலங்களில், ஓரிரு நாட்களில் விலகி விடும் என, இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகலுக்கான கால அட்டவணை அடிப்படையில், அக்., 18ல் வடகிழக்கு பருவ மழை துவங்கக் கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது, வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் சூழலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் முன்னதாக துவங்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ