கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் தென்காசியில் இன்று கன மழை பெய்யும்
சென்னை:கோவை, நீலகிரி உட்பட ஐந்து மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அம்மையம் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று மதிய நிலவரப்படி, அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தலா, 15 செ.மீ., மழையும், அடையாமடை, பேச்சிப்பாறையில் தலா 13 செ.மீ., மழையும் பதிவாகிஉள்ளது. வளிமண்டல சுழற்சி
மேலும், ஊத்துக்குளி, 12, திருப்பூர் வடக்கு பகுதியில், 11 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதேபோல், குளச்சல் எலந்தகுட்டை மேடு, திருப்பூர் தெற்கு பகுதியில் தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மாநில பகுதிகளின் மேலும், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேகமூட்டம்
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபோல, நாளை முதல், 11ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.