உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு கூடாது போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு கூடாது போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை:'ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல், அனைத்து தரப்பினரையும் போலீசார் சமமாக பாவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திஉள்ளது.பா.ம.க., கொள்கை பரப்பு செயலர், பி.கே.சேகர் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலை மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, ஜன., 2ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, மாநகர போலீஸ் கமிஷனரிடம் டிசம்பர், 30ல் விண்ணப்பிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனக்கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.நடப்பாண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், ஜனவரி, 6ல் துவங்கியது. அதில், கவர்னர் உரையாற்றாமல் புறக்கணித்து வெளியேறினார். கவர்னரின் செயலுக்கு எதிராக, எந்த கட்டுப்பாடும் இல்லாமலும், விண்ணப்பம் பெறாமலும், ஆளுங் கட்சியினரின் போராட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கியுள்ளார்.போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற, சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், நீதிபதி கூறியதாவது:ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல், அனைத்து தரப்பினரையும், காவல் துறை சமமாக பாவிக்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒரு தரப்புக்கு, ஒரு நாளில் அனுமதி அளிப்பதும், மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இருப்பதும் கூடாது. போராட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும்.போராட்டத்தில் பங்கேற்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு போலீசார் தான் பதில் சொல்ல வேண்டிய வரும். அவர்களை தான் குறை கூறுவர்.இவ்வாறு நீதிபதி கூறினார்.பின், பா.ம.க., மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள், காவல் துறை பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம், இம்மனு மீது விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை