கோயில்களுக்கு சொந்தமான நந்தவனங்களை பராமரிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை : தென்மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான நந்தவனங்களை முறையாக பராமரிக்க அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இந்திய மருத்துவ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென்மாவட்ட கோயில்களில் நந்தவனங்கள் இருந்தன. இதன் பெரும்பகுதி வணிக வளாகம், அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் குவிக்கப்படுகின்றன.கடவுளை வழிபட வரும் பக்தர்களுக்கு நந்தவனங்கள் அமைதி, நறுமணம் தருகின்றன. மருத்துவ குணமுடைய மரங்களிலிருந்து கிடைக்கும் மூலிகைக்காற்று நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நந்தவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பு, 'மனுதாரர் குறிப்பிடும் கோயில்களில் நந்தவனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறது,' என தெரிவித்தது.நீதிபதிகள்: ஒருவேளை முறையாக பராமரிக்கப்படாதபட்சத்தில் பராமரிப்பதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.