உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ., பணிக்கான தேர்வு பட்டியல் ரத்து புதிதாக வெளியிட ஐகோர்ட் உத்தரவு

எஸ்.ஐ., பணிக்கான தேர்வு பட்டியல் ரத்து புதிதாக வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'-தமிழகத்தில் காலியாக இருந்த, 621 எஸ்.ஐ., பணிக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து, புதிய பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும்' என, சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த, 621 சப் -இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, 2023 மே மாதம் விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்து, உடல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு நடைமுறைகள் முடிந்து, கடந்தாண்டு ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் முகமது அஸ்லம் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்த போது, 'தவறுகளை திருத்தி, புதிய தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.இதையடுத்து, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, கடந்தாண்டு அக்., 3ல் திருத்திய தற்காலிக தேர்வு பட்டியலை, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள், இந்த பட்டியலில் இல்லை என்றும், மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த விபரங்களும் இல்லாமல் வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்றும், 100க்கும் மேற்பட்டோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு:திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. முறையான இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை பின்பற்றி, புதிய தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை, இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவருக்கு உதவியாக, எஸ்.பி., அந்தஸ்தில் உள்ளவரை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். அனைத்து விபரங்களையும், நீதிபதியிடம் அதிகாரிகள் வழங்க வேண்டும். அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.புதிய தேர்வு பட்டியலை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதை வெளியிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை