நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தியாகிகளுக்கு மட்டுமே பென்ஷன்; ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை: திட்டத்தில் கூறப்பட்டு உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே, தியாகிகள் 'பென்ஷன்' பெற தகுதி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. திருப்பூர் பி.நல்லுாரைச் சேர்ந்தவர் எஸ்.சோமசுந்தரம். 'வெள்ளையனே வெளியேறு' உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, 1942ம் ஆண்டு செப்., முதல், 1943ம் ஆண்டு ஏப்ரல் வரை, கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துள்ளார். மத்திய அரசின் 'சுதந்திரதா சைனிக் சம்மான்' எனும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். தமிழக அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெறுவதால், மத்திய அரசின் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என, சோமசுந்தரம் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சோமசுந்தரம் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது, அவர் இறந்து விட்டதால், வழக்கை அவரது மனைவி ருக்மணி தொடர்ந்து நடத்தினார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சோமசுந்தரத்துக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கும்படி, கடந்த 2020ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை, சோமசுந்தரம் பூர்த்தி செய்யவில்லை. அதாவது, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சோமசுந்தரம் தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது விண்ணப்பத்தை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. எனவே, சோமசுந்தரத்துக்கு ஓய்வூதியம் வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், உரிய ஆவண ஆதாரங்களை சேகரித்து, சோமசுந்தரத்தின் மனைவி மீண்டும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மாநில அரசு ஓய்வூதியம் வழங்கியது என்பதற்காக, மத்திய அரசும் வழங்க வேண்டியதில்லை. மத்திய அரசு திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே, தியாகிகள் ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.