உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டர்பிளை மேம்பாலம் கேட்கும் ஓசூர் மாநகராட்சி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை

பட்டர்பிளை மேம்பாலம் கேட்கும் ஓசூர் மாநகராட்சி கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறை

ஓசூர்:கிருஷ்ணகிரி - ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சராசரியாக, 70,000 வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், ஓசூருக்கு புதிதாக அமைக்கப்படும் பஸ் ஸ்டாண்டால் பெரிய அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் நடக்கும் வாய்ப்புள்ளது. எனவே, 'பட்டர்பிளை' மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் கேட்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறை செவி சாய்க்காமல் மவுனம் காக்கிறது.

கடும் நெரிசல்

தமிழக எல்லையான ஓசூர் நகரில், சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட், இட நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளது. தினமும், 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் நிலையில், பஸ்கள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது.பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணியர் பாதிக்கப்படுகின்றனர். இதை கருதி, ஓசூருக்கு புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்ட, பத்தலப்பள்ளி அருகே ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தில், 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2023 அக்., மாதம் பணிகள் துவங்கப்பட்டன. புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைகிறது. அதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து, செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் தான் திரும்பி செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி - ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 70,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பண்டிகை, முக்கிய விஷேச நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், 1 லட்சம் வாகனங்கள் வரை செல்கின்றன.

விபத்து அதிகரிப்பு

அதனால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின், பத்தலப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் வந்தால், விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.எனவே, பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள பத்தலப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்தால் மட்டுமே, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் ஓரளவிற்கு குறைக்க முடியும்.அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த ஓராண்டிற்கும் மேலாக உள்ளது. அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை தான் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ஆய்வு இல்லை

அதனால், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மூலம், பத்தலப்பள்ளி பகுதியில் பட்டர்பிளை மேம்பாலம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தேசிய நெடுஞ்சாலைத்துறை, பட்டர்பிளை மேம்பாலம் அமைப்பதில், மவுனம் காக்கிறது. இதுவரை ஆய்வு கூட மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு நேரடியாகவும், எம்.பி.,க்கள் மூலமாகவும் மத்திய அரசுக்கு, அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வரும்.இல்லாவிட்டால் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின்பும் ஓசூரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D prasad
ஜன 17, 2025 09:47

What happened to Chennais approved 2nd Airport at Parandur


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 06:53

எவ்வளவு மேம்பாலம் கட்டினாலும் தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் ட்ராபிக் ஜாம் குறையாது


weightronics automation
ஜன 18, 2025 09:36

Well said sir


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை