பணிநீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் வேலை இலங்கை துணை துாதரகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 'பணிநீக்கம் செய்த இந்திய பெண்ணை, எட்டு வாரத்திற்குள் மீண்டும் பணியில் சேர்த்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும்' என, சென்னையில் உள்ள இலங்கை துணைத் துாதரகத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை துாதரகத்தில், செந்தில்குமாரி என்பவர், 2008 முதல் உதவியாளராக பணிபுரிந்தார்; 2018ல் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர், 'எனக்கு ஒரு மாத ஊதியம் மட்டுமே வழங்கி, பணி நீக்கம் செய்தனர். உரிய பணப்பலன்கள் வழங்கவில்லை. 'அதனால், உரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, தொழில் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், மனுதாரர் ஒப்பந்த தொழிலாளர் என்று கூறி, அவரது மனுவை நிராகரித்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமாரி வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:வியன்னா ஒப்பந்தத்தின் படியும், இந்திய அரசு நிறைவேற்றிய துாதரக உறவு சட்டப்படியும், துாதரகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இந்திய சமூக பாதுகாப்புச் சட்டங்கள் பொருந்தாது. ஆனால், இந்தியாவில் உள்ள துாதரகங்கள் மற்றும் துணைத் துாதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, இந்தியாவின் சமூக பாதுகாப்புச் சட்டங்கள் பொருந்தும்.எனவே, இலங்கை துணைத் துாதரகம், செந்தில்குமாரியை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்; 2018 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகையில், 30 சதவீதத்தை மட்டுமே, மனுதாரருக்கு பெற உரிமை உண்டு. எட்டு வாரங்களுக்குள் மனுதாரரை மீண்டும் பணி அமர்த்தி, நிலுவை தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, முழு ஊதியத்தையும் பெற மனுதாரருக்கு உரிமை உண்டு.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.