உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு பட்டம் சுமத்தி கைதி சித்ரவதை சிறை துறை டி.ஐ.ஜி., சஸ்பெண்ட்

திருட்டு பட்டம் சுமத்தி கைதி சித்ரவதை சிறை துறை டி.ஐ.ஜி., சஸ்பெண்ட்

சென்னை:கைதியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, திருட்டு பட்டம் சுமத்தி சித்ரவதை செய்த, சிறைத் துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம்கோட்டையைச் சேர்ந்தவர் சிவகுமார், 30. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை, வேலுார் சரக சிறைத் துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, தன் வீட்டு வேலைக்கு அமர்த்தினார். அவர், 4.25 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி விட்டதாக குற்றம் சாட்டினார்.இதனால், அவருடன் சேர்ந்து, வேலுார் மத்திய சிறை கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர், சிவகுமாரை, 14 நாட்கள் தனி சிறையில் அடைத்தனர். அவரை டி.ஐ.ஜி.,யின் பாதுகாவலர் உள்ளிட்ட, 14 பேர் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சிவகுமாரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, ராஜலட்சுமி உள்ளிட்ட, 14 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதனால், ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டார். மற்றவர்கள், வெவ்வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கைதி சிவகுமாரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், டி.ஐ.ஜி., ராஜலட்சமி, கூடுதல் எஸ்.பி., அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறைத் துறை டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ