| ADDED : ஏப் 18, 2025 11:46 PM
ஓசூர்:''அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதால், மக்கள் அவற்றை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா பேசியதாவது:மரங்கள் இயற்கையான காற்று வடிகட்டியாக செயல்படுகின்றன. மரங்கள் மீண்டும் வளர முடியாத பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம், வனப்பகுதியை மீண்டும் நிலைநாட்டவும், வன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாப்பது நம் கடமை.சாதாரண மக்கள், தேசிய சட்டச்சேவைகள் ஆணையம், தமிழ்நாடு சட்டச்சேவைகள் ஆணையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சட்டப் பிரச்னைகள் மட்டுமின்றி, மத்திய - மாநில அரசு திட்டங்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்துகொள்ள, மாவட்ட சட்ட உதவி மையத்தை மக்கள் நாடலாம்.மாவட்ட இலவச சட்ட உதவி மையம், நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமின்றி, மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருகிறது. மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டிய மத்திய - மாநில அரசு திட்டங்களை அறிந்து கொள்ளவும், கிடைக்கவும் மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம். அதன் வாயிலாக, மக்களாகிய உங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுவர்.நம் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அவசியம். பாடப்புத்தகத்தில் இருந்து கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் அரசு கொடுக்கிறது. இப்படி பல நல்ல திட்டங்களை அரசு செய்து கொடுக்கிறது. அவற்றை மக்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.