| ADDED : நவ 24, 2024 08:40 AM
தஞ்சாவூர்: - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார், 36. இவர், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் திருச்சியில் நடைபெற்ற எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் பங்கேற்றார்.அப்போது, மொபைல் போனை மறைத்து வைத்து, தேர்வு அறைக்குள், சதீஷ்குமார் எடுத்துச் சென்றுள்ளார். மேலும், வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மொபைல் போன் உதவியால், ஆன்லைனில் பதில் பார்த்து விடை அளித்துள்ளார். இதை தேர்வு அறை கண்காணிப்பாளர் பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.இதையடுத்து, சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கபிஸ்தலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இருப்பினும், சதீஷ்குமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்நிலையில், அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கட்டாய ஓய்வில் பணியிலிருந்து நேற்று முதல் விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் வெளியிட்டார்.