சென்னை: 'யூஸ் அண்டு த்ரோ' எனப்படும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட, சிகரெட் லைட்டருக்கு தடை விதிக்க வேண்டும் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், நேற்று சென்னையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து மனு அளித்தனர். துாத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலுார் மாவட்டங்களில், தீப்பெட்டி உற்பத்தியில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. இதில், 400 கோடி ரூபாய் ஏற்றுமதியாகிறது. 'யூஸ் அண்டு த்ரோ' பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட, 'லைட்டர்' பயன்பாட்டால், தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என, அந்த லைட்டருக்கு, தடை விதிக்க கோரி, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இந்திய தீப்பெட்டி தொழில் சபையினர், மனு அளித்தனர். இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட, சிகரெட் லைட்டரால், தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது. இதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, அந்த லைட்டரை தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி, நம் நாட்டிலேயே தயாரித்து, விற்கின்றனர். இதனால், தீப்பெட்டி தொழில் மிகவும் முடங்கி, தொடர்ந்து தொழில் செய்ய முடியாத அளவிற்கு நலிவடைந்துள்ளது. எனவே, ஒரு முறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியும், பிளாஸ்டிக் லைட்டர்கள் வாங்க, விற்க, இருப்பு வைக்க, நாடு முழுதும் தடை விதிக்க வேண்டும் என, அமைச்சரிடம் மனு அளித்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.