உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 முதல் இடி, மின்னலுடன் மழை வானிலை ஆய்வு மையம் தகவல்

25 முதல் இடி, மின்னலுடன் மழை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:'தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை மறுதினம் முதல் 28 வரை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.அதன் அறிக்கை:தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை மறுதினம், தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். பின், 26 முதல் 28ம் தேதி வரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும். நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மற்றும் திருச்செந்துாரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளில் 5; ராமேஸ்வரத்தில் 4; பாம்பனில் 3 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் குறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்., 1 முதல் நவம்பர் 22 வரை, இயல்பாக 311.9 செ.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டு 326.8 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உட்பட, 18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை