| ADDED : செப் 30, 2024 05:19 AM
விழுப்புரம்: உதயநிதி துணை முதல்வராக, விழுப்புரத்தில் நாங்கள் போட்ட தீர்மானம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அளிக்கிறது என, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதியை, துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழக இளைஞர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த திறமையுள்ள அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வராக நியமித்துள்ளதை, விழுப்புரம் மாவட்டம் சார்பாக வரவேற்கிறோம்.நான், பெரியார் தொண்டன், கருணாநிதி வழி வந்தவன், அண்ணாதுரை கொள்கையை ஏற்றவன், முதல்வர் ஸ்டாலினுடன் நெருங்கி பழகியவன் என்ற அடிப்படையில், உதயநிதி துணை முதல்வரானதை அன்போடு வாழ்த்துகிறேன்.அவரது வருங்காலம் சிறப்பாக அமையும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலு சேர்ப்பதாக உதயநிதியின் செயல்பாடு அமையும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.