புதுவருட வாழ்த்து கூறாத முதல்வர்: நாகேந்திரன் கோபம்
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:ஒட்டுமொத்த உலகமும், தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், 'தமிழ் மொழியின் காவலன் நான்' என, வீராப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு வாழ்த்து கூறாமல் புறக்கணித்து வருகிறார்.மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'ஆவின்' பால் பாக்கெட்டுகளில், புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து மடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாக, தமிழர்களின் கலாசார கொண்டாட்டமான, தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா. 'தமிழுக்காக உயிரை கொடுக்கும் தி.மு.க.,' என, விளம்பர வசனம் பேசிக் கொண்டு, தாய் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே தி.மு.க., பயன்படுத்துகிறது. இதற்கு, இதை விட வேறு என்ன சான்று வேண்டும். தொடர்ந்து, தமிழர்களின் மத, கலாசார நம்பிக்கைகளின் மீது, சேற்றை வாரி இறைக்கும் தி.மு.க.,வுக்கு, ஓட்டுச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.