அரியக்குடி அறக்கட்டளை சொத்துக்கள் பரிமாற்றத்தில் ரூ.137 கோடி மோசடி அமைச்சர் நேரு தம்பிக்கு நோட்டீஸ்
சென்னை:மோசடி ஆவணங்கள் வாயிலாக அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பரிமாற்றம் செய்த அறங்காவலர்கள், வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அறக்கட்டளை சந்ததியினர் தொடர்ந்த வழக்கில், பத்திரப்பதிவு ஐ.ஜி., மற்றும் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் ராமசாமி, சூளைமேடு பகுதியை சேர்ந்த என்.சரவணன் ஆகியோர் தாக்கல் செய்த மனு:நாங்கள், திருச்சி அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான அறக்கட்டளையை நிறுவிய சாத்தப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார் ஆகியோரின் சந்ததியினர். அறக்கட்டளைக்கு சொந்தமாக ஏராளமாக சொத்துக்கள் உள்ளன. செல்லாதவை
இந்த அறக்கட்டளை அறங்காவலரான சிவகங்கையை சேர்ந்த நாராயணன் செட்டியார், கோவையை சேர்ந்த குமரப்பன் செட்டியார் ஆகியோர், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் வாயிலாக பரிமாற்றம் செய்துஉள்ளனர்.திருச்சியை சேர்ந்த செந்தில்குமார், ஸ்ரீதேவி, பிரியதர்ஷிணி, வடிவேல் மற்றும் கோவையை சேர்ந்த கே.என்.மணிவண்ணன் ஆகியோருக்கு, அறங்காவலர்கள் இருவரும் செய்த சொத்து பரிமாற்றங்கள் செல்லாதவை. அவை அறக்கட்டளையை கட்டுப்படுத்தாது.அறங்காவலர்கள் இருவராலும், சிங்காநல்லுார் மற்றும் ஸ்ரீரங்கம் சார் - பதிவாளர் வாயிலாக, 2020 மற்றும் 2024ம் ஆண்டுகளில் மூன்று சொத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. போலி ஆவணங்கள்
மதிப்பாய்வு அறிக்கையின்படி, பரிமாற்றம் செய்யப்பட்ட சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு, 137 கோடி, 16 லட்சத்து 50,000 ரூபாய். ஆனால், சொத்து பரிமாற்றம் செய்த பத்திரங்களில், அவற்றின் மதிப்பு 13 கோடி, 3 லட்சத்து, 37,000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் இருவரும் போலி ஆவணங்கள் வாயிலாக, அறக்கட்டளைக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.மிகப்பெரிய இந்த மோசடிக்கு துணை போன பத்திரப்பதிவு அதிகாரிகள், சொத்து பரிமாற்றம் செய்தவர்கள், அறங்காவலர்கள் ஆகியோர் மீது, பத்திரப்பதிவு சட்ட விதிகள்படி நடவடிக்கை எடுக்க, பத்திரப்பதிவு ஐ.ஜி., திருச்சி மாவட்ட பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., திருச்சி, கோவை மாவட்ட நிர்வாக பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது சபீக், பத்திரப்பதிவு ஐ.ஜி., திருச்சி பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., திருச்சி, கோவை மாவட்ட நிர்வாக பதிவாளர்கள், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், சிங்காநல்லுார் சார் - பதிவாளர்கள், கே.என்.மணிவண்ணன், அறங்காவலர்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார். விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.