மறைந்த முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவு ரத்து
சென்னை:மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து, சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை துவக்கவும் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவர், 1996 முதல் 2001ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், வேளாண் துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 80 லட்சத்து 85,606 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. அதனால், வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவியர் ரங்கநாயகி, லீலா, மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா மற்றும் மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக, 2004ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.தள்ளுபடி
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, 2006ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, 2012ல் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் அடைந்தார். இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை விடுவித்தது சரியே எனக்கூறி, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வழக்கில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட நபர் இறந்து விட்டாலும், மற்ற நபர்கள் மீதான வழக்கை விசாரிக்கலாம்' என்று கூறி, வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, 2017ல் உத்தரவிட்டது.இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் இறந்ததால், அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது. விடுவித்தது தவறு
இதையடுத்து, வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவியர், மகள், மகன், மருமகள்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவில்லை. சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய நிலையில், விசாரணை நீதிமன்றம் ஆவணங்களை நிராகரித்தது தேவையற்றது. சொத்துக்கள், தங்கள் சொந்த சம்பாத்தியம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்க முடியாது.இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா அல்லது இல்லையா என்பதை, முழுமையான சாட்சி விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும். எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு.இது தொடர்பான சேலம் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசின் மனு ஏற்கப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சேலம் நீதிமன்றம் சாட்சிகள் விசாரணையை துவக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.