உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., தலைவர் அன்புமணி பதவி பறிப்பு : ராமதாஸ் அதிரடி

பா.ம.க., தலைவர் அன்புமணி பதவி பறிப்பு : ராமதாஸ் அதிரடி

சென்னை: மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக நியமித்து, பா.ம.க.,வில் அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார் ராமதாஸ். ''இனி நானே நிறுவனர்; நானே தலைவர்,'' என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி:

சமுதாயத்தைப் பீடித்த அறியாமை நோயை தீர்க்கும் மாமருந்து அரசியல் அதிகாரம் என்பதை உணர்ந்து, 1989ல் பா.ம.க.,வை துவக்கினேன். தமிழகத்தில் என் கால் தடம் படாத கிராமங்களே இல்லை என்கிற அளவுக்கு பயணித்து, கட்சியை கட்டமைத்தேன். தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தினேன். பாளையங்கோட்டை தவிர, மற்ற அனைத்து மத்திய சிறைகளிலும் கொடுமைகளை அனுபவித்து, இந்த இயக்கத்தை நடத்தி வருகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=89sgs6r1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சியில் கைவிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட பின், மறு பிறவி எடுத்து வந்தேன். நான் பார்லிமென்டிற்கோ, சட்டசபைக்கோ செல்ல ஆசைப்பட்டதில்லை. இனியும் வாழ்நாள் முழுதும் ஆசைப்பட போவதில்லை. லட்சோப லட்சம் பாட்டாளி மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். இதை விட பெரிய பதவி வேறு எதுவும் இல்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும், பொது மக்களும் என்னை சந்திக்கின்றனர்.கடந்த, 1989ம் ஆண்டு துவக்கத்தில் இருந்த, என் செயல்பாடுகளை பார்த்தது இல்லை என்றும், என் தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்றும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் புதிய தலைமுறையினர் அன்பு கட்டளையிட்டனர். அவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றவும், வரும், 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும், பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதன்படி, பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன்.தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். அதை ஏற்று, பா.ம.க.,வினர் ஒன்றுபட்ட உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். வரும் மே, 11ல் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இதுவரை கண்டிராத வகையில் வெற்றிகரமாக நடக்க, மாநாட்டு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணியுடன் இணைந்து உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., கூட்டணிக்கு விருப்பம்:

'தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற வேண்டும்' என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் கூட்டணி முடிவை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எடுத்த போது, கட்சிக்கு வெற்றி கிடைத்தது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க, தைலாபுரம் வீட்டிற்கு டில்லி தலைவர்களும், தமிழக தலைவர்களும் சென்று, ராமதாசிடம் பேச்சு நடத்தினர்.அன்புமணி கட்சி தலைவரான பின், அவர் கூட்டணியை முடிவு செய்கிறார். சென்னை வரும் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணியை முடிவு செய்ய அன்புமணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது, இதை ராமதாஸ், சில மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை. இப்போதே அமித் ஷாவிடம் கூட்டணியை உறுதி செய்தால், தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகளிடம், தொகுதி பங்கீடு குறித்து பேரம் பேசுவது குறைந்து விடும்.தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் வெளியேறினாலும், வெளியேறவில்லை என்றாலும், பா.ம.க., இணைந்தால் வெற்றி பெற முடியும் என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், தற்போது தி.மு.க.,வுடன் நெருக்கம் காட்டுகின்றனர். அ.தி.மு.க., பிரிந்திருப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே, அக்கட்சிக்கு பதில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம். தி.மு.க.,வில் வாய்ப்பில்லை என்றால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்.அதற்கு முன், பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிடம் மதிப்பு இருக்காது என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராமதாசிடம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

ராமதாசை சமாதானப்படுத்த முயற்சி

தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது, பா.ம.க.,வுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் முன்னாள் நகர செயலர் ராஜேஷ் ஆதரவாளர்கள், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலுள்ள ராமதாஸ் வீட்டின் முன் கூடி, அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கக்கோரி கோஷமிட்டனர். அவர்களை, பா.ம.க., மாவட்ட செயலர் ஜெயராஜ் அப்புறப்படுத்த முயன்றார். இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. காவல் துறையினர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர்.இந்நிலையில், நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த ராமதாஸ் மகள்கள் ஸ்ரீகாந்தி, கவிதா, பா.ம.க.. செய்தித் தொடர்பாளர் பாலு, சிவகுமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ரகசியம் காத்த ராமதாஸ்

வழக்கம் போல தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியின் பதவி பறிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது உடன் இருந்த மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலர் ஜெயராஜ் ஆகியோருக்கு கூட இது தெரியவில்லை. அதேபோல, வழக்கமாக முக்கிய அறிவிப்பு வெளியிடும் போது, ராமதாசுடன் இருக்கும் கவுரவ தலைவரான ஜி.கே.மணியும் நேற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ., கூட்டணி தொடருமா?

எனது முடிவுக்கு காரணங்கள் பல உண்டு. அதை இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. சிறுக சிறுக பகிர்ந்து கொள்ளலாம். பா.ம.க., நிர்வாக குழு, செயற்குழு, மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருடனும் ஆலோசித்து, பா.ஜ., கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,

ஜனநாயக படுகொலை

பா.ம.க.,வின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியாகத்தான் இருந்துள்ளன. ஆனால், இந்த முடிவு தவறு அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாகவே நினைக்கிறேன். அன்பு தானே எல்லாம்.-திலகபாமா, பொருளாளர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

sankaranarayanan
ஏப் 11, 2025 21:16

ஆதியிலிருந்து ஒழுங்காக ஒரே ஒரு கூட்டணியில் இருந்தால் சரி நன்றாகவே இருக்கும் அப்படி நீங்கள் இல்லையே நீங்கள் எங்கே பெட்டி வருகிறதோ அங்கே சென்று கூட்டணியை அறிவிப்பதால் ஏற்பட்ட விபரிதம் இனி தேறாது ..பெட்டியும் வராது


தாமரை மலர்கிறது
ஏப் 11, 2025 19:23

வயதாகிவிட்ட ராமதாஸ் கட்சியை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுவது நல்லது. இல்லையெனில் முலாயம்சிங் கதைதான் நடக்கும். முரண்டு பிடித்தால், ஒருமுறை ராமதாஸ் வீட்டில் ரைடுவிட்டால், அமைதியாகிவிடுவார். பாமகவிற்கு பிஜேபியுடன் கூட்டணி என்பது அவசியமானது.


மூர்க்கன்
ஏப் 12, 2025 09:51

பச்சையா மிரட்டி கூட்டணி வைக்க நிர்பந்தத்தால் பாட்டாளி வர்க்கம் பொங்கல் வச்சுடும் ?? அப்புறம் ம/...தான் மலர் ஒண்தாமரை .


naranam
ஏப் 11, 2025 15:30

ஐயா, தயவு செய்து இந்த அப்பா மகன் பித்தாலட்டக் குடும்ப ஜாதி கட்சியைப் பற்றிய செய்திகளை இனிமேல் வெளியிடாதீர்கள். நன்றி


Tiruchanur
ஏப் 11, 2025 14:46

வயசு கோளாறு.


பிரேம்ஜி
ஏப் 11, 2025 13:01

இந்த மாற்றத்தினால் நாட்டுக்கோ, வீட்டுக்கோ, கட்சிக்கார்களுக்கோ எந்த லாபமோ நஷ்டமோ கிடையாது! இது குடும்ப விஷயம்! இதற்கு செய்தி போடுவதும் நான் கருத்து போடுவதும் வெட்டி வேலை தான்!


nv
ஏப் 11, 2025 12:23

இவர்களது DNA விளையாடுகிறது!! தன்னுடைய மகன் கட்சியில் பதவிக்கு வந்தால் என்னை அடி என்று சொன்னார் இவர்?? வெறும் நாடக கம்பெனி


Rajah
ஏப் 11, 2025 12:01

வயசானால் இப்படியான அகந்தை வரத்தான் செய்யும். கட்டுமரம் இதற்கு நல்ல உதாரணம். தங்கைக்கு பதவி கொடுக்காமல் மகனுக்கு பதவி கொடுக்கும் காலம் இது.


RRR
ஏப் 11, 2025 11:48

ஜாதியால் நான்... எனக்காகவே ஜாதி... எனக்காகவே கட்சி...


RRR
ஏப் 11, 2025 11:46

கருணாநிதி குடும்பமே சரணம்...


Sampath Kumar
ஏப் 11, 2025 11:28

பெருசுக்கும் சிருசுக்கும் புட்டுக்கிச்சு போல அப்பன் ஒருவழி பிள்ளை வேறு வழி தொண்டர்கள் வேறு வழிதான்