அன்புமணிக்கு எதிராக பா.ம.க., ராமதாஸ் வழக்கு
சென்னை: பா.ம.க., பெயர், கொடி மற்றும் சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரி, ராமதாஸ் தரப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து, ராமதாஸ் தரப்பு சட்ட ஆலோசகர் அருள் கூறியதாவது: பா.ம.க.,வுக்கு அன்புமணி தலைவர் கிடையாது. தலைவருக்கான அங்கீகாரம் அளிக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனில், ராமதாசிடம் தான் பேச வேண்டும். எனவே, பா.ம.க., பெயரை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வுடன் அன்புமணி கூட்டணி அமைத்திருப்பது, சட்ட விரோதம். பா.ம.க., பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க., தொடர்பான எந்த கடித போக்கு வரத்தையும், அன்புமணி தரப்புடன் மேற்கொள்ளக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, கூட்டணி அமைத்தால், அது தேசிய கட்சி தலைவராக இருந்தாலும், மாநில கட்சி தலைவராக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.