உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விற்பனையில் அம்பலமாகும் தமிழக அரசு! ராமதாஸ் காட்டம்

கள்ளச்சாராய விற்பனையில் அம்பலமாகும் தமிழக அரசு! ராமதாஸ் காட்டம்

சென்னை; கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருவதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் தமிழக அரசும், மதுவிலக்குப் பிரிவும் என்ன செய்து கொண்டிருந்தன? இந்த விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் எழுப்பியுள்ள வினா மிகவும் முக்கியமானது; இந்த வினாவுக்கு நேர்மையாக பதிலளிக்காமல் தமிழக அரசு தப்பித்து விட முடியாது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 18 பேரும் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறினார். அதைக் கேட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளாக அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்கள் என்றால், அவர்களை கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என வினா எழுப்பினார்கள்.கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்ததற்கு அப்பகுதியில் எந்த வித தடையும் இல்லாமல் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதும், கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்ததும் தான் காரணம் என்று பா.ம.க., நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வந்தது. அந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து உறுதி செய்திருக்கிறது.கள்ளச்சாராய சாவுகள் குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி கடந்த நவம்பர் 20ம் நாள் தீர்ப்பளித்த நீதிபதிகள்,''கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கள்ளச்சாராய விற்பனையை தமிழக காவல்துறை கண்டும் காணாமலும் இருந்ததைத் தான் இது காட்டுகிறது; கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு'' என்றெல்லாம் கண்டனக் கணைகளை தொடுத்தார்கள்.கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது. இதற்காக தமிழக அரசு தலைகுனிய வேண்டும். இனியாவது பொறுப்புடன் செயல்பட்டு தமிழகத்தில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட விற்பனை செய்யப்படவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.Ramakrishnan
டிச 18, 2024 22:26

அரசு பொறுப்புடன் செயல்படவேண்டும் என்று புத்திமதி சொல்கிறவர், அண்டம் கிடுகிடுக்க ஆகாசம் நடுநடுங்க... ஊமை ஜனங்களுக்கு இவ்வளவு தைரியம் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று மற்றவர்கள் பேச, ஆட்சியில் இருப்பவர்களுடைய குடை சாய... இந்த ஊமை ஜனங்கள் பேசப்போகிறார்கள் என்று மிரட்டியது மட்டும் பொறுப்புணர்வு பேச்சா?


Barakat Ali
டிச 18, 2024 17:27

சரியான, தெள்ளத்தெளிவாக அறிக்கை ....... வெட்கமில்லாத ஆளும் தரப்பு .......


சம்பா
டிச 18, 2024 14:53

சரி நல்ல சாராயம் விற்பனை செய்யவும் அரசு


முக்கிய வீடியோ