போலீசார் இலவச பயணம்: வழிகாட்டுதல் வெளியீடு
சென்னை : அரசு பஸ்களில், போலீசார் இலவசமாக பயணிக்க, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.அரசு பஸ்சில் இலவச பயணம் செய்வது தொடர்பாக, கடந்த மே மாதம் நடத்துனருடன், காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ, வேகமாக பரவியது. இதையடுத்து, பணியில் இருக்கும் போலீசார், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை, சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும், நகர, புறநகர் பஸ்களில், 'ஏசி' பஸ்களை தவிர்த்து, மற்ற பஸ்களில், போலீசார் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணிக்கும் வகையில், இலவச பயண அட்டை வழங்கப்பட உள்ளது. அதை காண்பிப்போரை, இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்.பயண அட்டை குறிப்பிட்ட மாவட்டத்துக்கு உள்ளாகவும், கால அளவுக்கும் செல்லுபடியாகும். அட்டையை காண்பிக்க தவறினால், அபராதம் வசூலிக்கலாம். பயண அட்டையை தவறாக பயன்படுத்தினால், பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது, 'வாரன்ட்' காண்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.