குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி கொடுங்கள்: ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு முதல்வர் கடிதம்
சென்னை:மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ஜனவரி, 31ல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதில், மிஷன் சக் ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டம், மிஷன் சக்தி இயக்கம், மிஷன் வத்சல்யா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்காக, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட, 716 கோடி ரூபாய், நடப்பாண்டு ஜனவரி, 29 வரை, செலவு செய்யப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் அன்னபூர்ணாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு, மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.பெரும்பாலான நேரங்களில், மத்திய அரசின் நிதி பங்களிப்பு தொகை, காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ வழங்கப்படுகிறது.நிதியாண்டின் முடிவிற்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை, மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டிய திட்டங்களுக்கு குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.பிரதமரின் 'மாத்ரு வந்தனா யோஜனா' என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள, 304 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்கு தொகை, 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் உள்ளது.பயனாளிகளின் வங்கி கணக்குகளில், உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது. ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள, 576 கோடி ரூபாயில், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், 482 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும்.மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக, அடுத்த நிதியாண்டுக்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்கு தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள், அந்தந்த நிதியாண்டுக்குள் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.