16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
சென்னை : தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8வது ஊதிய கமிஷனை உருவாக்க வேண்டும்; புதிய பணியிடங்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இருப்பு பாதை பராமரிப்பு பணிகள் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கோட்ட தலைவர் முரளி, கிளை செயலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வந்து பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, அவர்களின் மாநிலத்தில் பணியமர்த்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும், ரயில்வேயில் பணியாற்ற வேண்டிய சில ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள் இல்லத்தில் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்ற அமர்த்தப்பட்டு, வேறு எங்கோ வேலை செய்து வருகின்றனர். ரயில்வே துறைக்கு நஷ்டத்தை உண்டாக்குகின்றனர். இதற்கு, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.