30,307 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை
சென்னை:நாடு முழுதும், ரயில் நிலைய மேலாளர் உட்பட ஐந்து பிரிவுகளில், 30,307 காலியிடங்களுக்கு, நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, 30,307 காலிப்பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலைய மேலாளர் 5,623; டிக்கெட் பரிசோதகர் 6,235; சரக்கு ரயில் மேலாளர் 3,562; உதவி அலுவலர் 7,520; கிளார்க் 7,367 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டதாரிகள் நாளை முதல் அடுத்த மாதம், செப்., 29 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு, இரண்டு நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் நிலை தேர்வு வாயிலாக, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான, முழு தகவல்களை, https://www.rrbchennai.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.