வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு கும்பல் வேறேன்ன செய்யும்..??
சென்னை:நுகர்வோர் வாங்கித் தரும் மீட்டரை ஏற்பதுடன், மீட்டர் விற்பனையில் விதிகளை பூர்த்தி செய்யும் அனைத்து நிறுவனங்களின் விபரத்தையும் வெளியிடுமாறு, தமிழக மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாமதம்
தமிழகத்தில், வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் புதிய மின் இணைப்பு வழங்கும்போது, மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதற்கான கட்டணம் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. அலுவலகங்களில், மீட்டர் இருந்தாலும் மின் இணைப்பு வழங்க தாமதம் செய்யப்படுகிறது. குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றித் தரவும் தாமதம் செய்யப்படுகிறது. இதனால், நுகர்வோர் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, விரைவாக மின் இணைப்பு வழங்குவதற்கும், குறைபாடு உடைய மீட்டரை மாற்றவும் விண்ணப்பித்த நபரே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மீட்டர் வாங்க அனுமதிக்குமாறு வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எந்தெந்த நிறுவனங்களில் மீட்டர் வாங்க வேண்டும் என்ற பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டது. அந்நிறுவனங்களிடம் இருந்து மீட்டர் வாங்கிக் கொடுத்தாலும், மின் வாரிய அலுவலகங்களில் ஏற்பதில்லை என, புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், நுகர்வோர் வாங்கித்தரும் மீட்டரை ஏற்பதுடன், மீட்டர் விற்பனையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களின் விபரங்களையும் வெளியிடுமாறு, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னுரிமை
இதுகுறித்து, மின் வாரிய தலைவருக்கு, நேற்று முன்தினம் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம்: புதிய மின் இணைப்புக்கு, நுகர்வோர் வாங்கி தரும் மீட்டர் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்ற தகவல் வருகிறது. மேலும், குறைபாடு உடைய மீட்டரை மாற்றி தர தாமதிக்கும் பட்சத்தில், அந்த நுகர்வோர் வாங்கி தரும் மீட்டரும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றும் தெரிகிறது. இரண்டு விஷயங்களும், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயல். நுகர்வோர் நேரடியாக மீட்டர் வாங்க அதிகாரம் அளிக்கப்படுகிறது. மீட்டர் வாங்க மின்வாரியம் வெளியிட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில், ஒன்றிரண்டுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.'100ஏ' மீட்டருக்கு ஒரே நிறுவனம் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஒரு நிறுவனம் என்பதால், முழு சந்தையையும் கட்டுப்படுத்தி, நுகர்வோரிடம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மின் வாரியம் அங்கீகரித்த, 8,000 ரூபாய்க்கு பதில், 17,582 ரூபாய் வசூலிக்கிறது. எனவே, விதிகளை பூர்த்தி செய்யும், அனைத்து மீட்டர் விற்பனை நிறுவனங்களின் விபரங்களையும் வெளியிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். மீட்டர் செயல்பாட்டு வழிமுறைகளை, ஒரு மாதத்திற்குள் மாற்றி அமைக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, 92 நிறுவனங்களின் பட்டியலை, மின்வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
திருட்டு கும்பல் வேறேன்ன செய்யும்..??