உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு விட்டு பேசுங்கள் * அமைச்சர் ரகுபதிக்கு உதயகுமார் பதில்

மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு விட்டு பேசுங்கள் * அமைச்சர் ரகுபதிக்கு உதயகுமார் பதில்

சென்னை:'மத்திய அரசுக்கு, தமிழக அரசு எழுதிய கடிதத்தை வெளியிட்டு விட்டு, டங்ஸ்டன் சுரங்கம் பற்றி சட்ட அமைச்சர் ரகுபதி பேசட்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நீண்ட காலம் உழைத்த சொந்த கட்சியினரை நம்பாமல், அ.தி.மு.க.,வில் இருந்தவர்களை நம்பிதான், தி.மு.க., கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். அப்படி ஒருவரான அமைச்சர் ரகுபதி பெயரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அறிக்கை வந்துள்ளது.இரண்டு நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் தவறுகளை, மோசடி வேலைகளை, கமிஷன், கலெக்சன், கரப்சனுக்காக செய்யும் தகிடுதத்தங்களை, பழனிசாமி அம்பலப்படுத்தினார். அதனால், அவர் மீது அமைச்சர் ரகுபதி அவதுாறுகளை அள்ளி வீசியுள்ளார்.மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் சிறப்பு மண்டலத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ரகுபதி பேசியிருக்கிறார்.மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, மத்திய அரசுக்கு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழக அரசே சுரங்க ஏலத்தை நடத்த கோரப்பட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது. தி.மு.க., அரசுக்கு தைரியம் இருந்தால், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட பிறகு பேசட்டும்.கடந்த நவம்பர் 27ல், மத்திய நீர் ஆணையம் எச்சரித்த உடனே, சாத்தனுார் அணை பகுதியிலும், ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில், பழனிசாமி மக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது, எங்களுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் வரவில்லை என மக்கள் அவரிடம் தெரிவித்தனர். அதைத்தான் அவர் எடுத்துரைத்தார்.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் சீரழிந்து கிடப்பதை, அனைத்து தரப்பினரும் உணர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அமைச்சர்களை விட்டு அவதுாறு அறிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் விடுகிறார். இனியாவது அதிகார மமதையில் வெற்று அறிக்கைகளை விடாமல், மக்கள் மன நிலையை உணர்ந்து, ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி