முன்விரோதத்தில் வெட்டப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி பலி
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்ட ரவுடி, சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுச்சேரி, லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்தவர் ஜாக்கப் பால், 23; ரவுடியான இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 23ம் இரவு லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த நண்பரின் மகள் பிறந்த நாள் விழாவிற்கு பைக்கில் சென்றார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, கத்தியால் முகத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜாக்கப் பாலை, லாஸ்பேட்டை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கடந்த மே 31ம் தேதி, காதல் தகராறில் பஞ்சாயத்து செய்த சண்முகாபுரம் பச்சையப்பன்,22; உள்ளிட்ட மூவரை ஜாக்கப் பால் கத்தியால் வெட்டினார். இந்த முன்விரோதம் காரணமாக, பச்சையப்பனை கொலை செய்ய ஜாக்கப் பால், மிட்டாய் மணி என்பவரிடம் திட்டம் வகுத்து கொடுக்குமாறு கேட்டார். இந்த தகவலை மிட்டாய் மணி, பச்சையப்பனிடம் கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த பச்சையப்பன், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, ஜாக்கப் பாலை வெட்டியது தெரிய வந்தது. அதன்பேரில், பச்சையப்பன், முகிலன்,21; மற்றும் இரு சிறுவர்கள் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரை சிறையிலும், சிறுவர்கள் இருவரை சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜாக்கப் பால் நேற்று காலை 6:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதையடுத்து, போலீசார், ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, வழக்கில் தலைமறைவாக இருந்த சந்துரு,21; மிட்டாய் மணி,19; ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். ஜாக்கப்பால் இறந்ததால், நாவற்குளம் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.