போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.1,137 கோடி
சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 1,137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவை, வழங்கப்படாமல் உள்ளன. தமிழகம் முழுதும் 7,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பணப்பலன் பெறாமல் உள்ளனர். அவர்களுக்கு பணப்பலன்களை வழங்கக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சி.ஐ.டி.யு., சார்பில், மாநிலம் முழுதும், 15 இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 1,137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக போக்குவரத்துக் கழகங்களில், கடந்த 2023 ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை, ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும், பணப்பலன் வழங்க, 2,450.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, போக்குவரத்து துறைத் தலைவர் கடிதம் அனுப்பி இருந்தார். இதை பரிசீலித்த அரசு, 1,137.97 கோடி ரூபாயை, தற்காலிக முன்பணமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 3,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு, ஓய்வுகாலப் பலன்கள் விரைவில் வழங்கப்படும் என, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.