தினமலர் இணை நிர்வாக ஆசிரியருக்கு விருது சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் வழங்கல்
கோவை:சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்ரா மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் கோவை ராம்நகர் கோதண்ட ராமர் கோயிலில் இரண்டு மாதம் தங்கி, விரதமிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விரதம் முடிவில், பல்வேறு துறைகளில், தர்மத்தை கடைபிடித்து வருவோருக்கு 'பிராசஸ்திபத்ரம்' என்ற 'தர்ம ரத்னா விருது' வழங்கும் விழா கோயில் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது. கோயில் தலைவரான, மூத்த வக்கீல் நாகசுப்பிரமணியம் வரவேற்றார். 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.லட்சுமிபதி சார்பில் அவரது பேரன் ஆர்.ராம்குமார், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி சார்பில், வங்கியின் செயல் இயக்குனர் விஜய்ஆனந்த், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சிவகணேஷ் ஆகியோருக்கு 'தர்ம ரத்னா' விருது, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணனுக்கு, 'தர்ம ரக் ஷா சிரோன்மணி' விருது வழங்கப்பட்டது. சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள் விருது வழங்கி பேசுகையில், ''சனாதன தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தர்மத்தை கடைபிடித்தால் கடவுள் அருள் கிடைக்கும். மதமாற்றம் என்ற புற்றுநோய் பரவுகிறது. மதமாற்றம் தடுக்க எப்போது அழைத்தாலும் வரத்தயாராக இருக்கிறேன். மதம் மாறிய ஹிந்துக்கள் திரும்பி வர வேண்டும். ஹிந்துக்கள் தினமும் நெற்றியில் திருநீறு, குங்குமம் வைக்க வேண்டும். தர்ம காரியத்தில் சிறந்து விளங்கியோருக்கு விருது வழங்கப்பட்டது. 'தினமலர்' நாளிதழ் ஆன்மிக செய்திகளை தொடர்ந்து வெளியிட வேண்டும்,'' என்றார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி
'தினமலர்' நாளிதழுக்கு வழங்கிய விருதை பெற்றுக் கொண்ட ராம்குமார் ஏற்புரை ஆற்றுகையில், ''தினமலர் நாளிதழ் வரலாற்றில் இன்று பொன்னான நாள். இரட்டை சந்தோஷம் கிடைத்துள்ளது. 75 ஆண்டுக்கு முன் இதே நாளில் 'தினமலர்' துவங்கப்பட்டது. இன்றைய தினம் பவள விழா கொண்டாடி வருகிறோம். அதே நாளில், 'தர்ம ரத்னா' விருது கிடைத்துள்ளது இரட்டை மகிழ்ச்சி. விருது வழங்கிய சுவாமிஜிக்கு நன்றி,'' என்றார்.