மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் 3 இடங்களில் இன்று துவக்கம்
சென்னை: தமிழகத்தில் மூன்று இடங்களில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், 2011ல், நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரி மாதம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்னோட்டமாக, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மூன்று இடங்களில், இன்று முதல், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் போது, 34 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன. இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். வரும் 30ம் தேதி மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவடையும்.