| ADDED : அக் 21, 2025 06:04 AM
சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, 'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறு வனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, கடந்த ஆக., 1ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக, துாய்மை பணியாளர்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், ஆங்காங்கே துாய்மை பணியாளர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டினர். போஸ்டரில், 'சென்னை மாநகராட்சி கமிஷனர் அவர்களே... சட்டத்திற்கு விரோதமாக 2,000 துாய்மைப் பணியாளர்களை, 'ராம்கி' ஒப்பந்ததாரரிடம் வீசி எறிந்து, எமது வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு, எங்களது கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தகவலறிந்த பெரிய மேடு போலீசார், போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேரை கைது செய்தனர்.