விருதுநகர் : சிவகாசி அருகே, சத்தியா நகர் ஊராட்சிப் பள்ளியில், மாணவிகளிடம் 'சில்மிஷம்' செய்த தலைமையாசிரியரை, துவக்க கல்வித்துறை 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ள, சத்தியா நகர் ஊராட்சிப் பள்ளி தலைமையாசிரியர் தனசேகர்,51. இவர், எட்டாம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி, 'சில்மிஷ'த்தில் ஈடுபட்டதாக, நடவடிக்கை எடுக்கக் கோரி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கல்வித்துறை, போலீசார், தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக, மக்களிடம் சமரசம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்பலம், தலைமையாசிரியர் தனசேகரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு, நேற்று முன் தினம் இரவு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.முதன்மைக் கல்வி அதிகாரி விஷ்ணுபிரசாத் கூறுகையில்,''பள்ளி மாணவிகளிடம் 'சில்மிஷம்' செய்ததாக வந்த புகார் காரணமாக, தலைமையாசிரியர் தனசேகர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைகள் தொடரும்'' என்றார்.