சென்னை: விவசாயத்திற்கு மின்சாரம் செல்லும் மின் வழித்தடங்களில் பழுது ஏற்படுவதை தடுக்க, விவசாய பிரிவில், தினமும் எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை, 'ஸ்மார்ட்' மீட்டர் வாயிலாக அறிய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு, மின் வாரியம் இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. தற்போது, 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கிராமங்களில் வீடு, விவசாயம், கடை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே வழித்தடத்தில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயத்திற்கு, 18 மணி நேரம்; மற்ற இணைப்பு களுக்கு, 24 மணி நேரம் மின் வினியோகம் செய்யப்படுகிறது.பல கிராமங்களில், விவசாயத்திற்கு மின் வினியோகம் செய்யாத நேரத்திலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு, மின் சாதனங்கள் பழுதாகின்றன. எனவே, விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மின் மோட்டார்கள் பொருத்தப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, மின் பயன்பாட்டு விபரத்தை அறிய, மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு மின் இணைப்பும் வழங்கக் கூடாது என, மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், 2018ல் இருந்து, விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின் கட்டணம் இல்லாததால், அந்த மீட்டரில் பதிவாகும், மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை.'ஸ்மார்ட் மீட்டரில்' எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிய முடியும். ஒவ்வொரு பிரிவிலும், தினமும் எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் படுகிறது என்ற விபரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, மின் உற்பத்தி, மின் கொள்முதல் செய்ய திட்டமிடப்படும்.அதன்படி, விவசாய இணைப்புகளில், எந்த நேரத்தில் அதிகமாக, குறைவாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விபரம் தெரிந்தால், அதிக மின் பயன்பாடு உள்ள விவசாய இணைப்புகளில், அதற்கு ஏற்ப கூடுதல் திறனில் மின் சாதனங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மின்னழுத்த பிரச்னையை தடுக்க முடியும்.எனவே, விவசாய மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட உள்ளது. சோதனை முயற்சியாக, 1,200 இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, கண்காணிக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, மீட்டர் பொருத்தி, தகவல்கள் பெறப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினாலும் விவசாயத்திற்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தனி வழித்தடத்தில் மின்சாரம்
மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ், தமிழகத்தில் விவசாயத்திற்கு, தனி வழித்தடத்தில் மின் வினியோக பணி துவங்கி உள்ளது. அதன்படி, 6,200 கிராம மின் வழித்தடங்களில், விவசாய மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 30 சதவீதத்திற்கு மேல் விவசாய இணைப்பு உள்ள, 1,685 வழித்தடங்களில் இருந்து, விவசாயத்திற்கு தனி வழித்தடம் அமைக்கும் பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக துவக்கப்பட்டுள்ளன. இதனால், மின்னழுத்த பிரச்னை ஏற்படாது. மின் இழப்பு குறையும். பகலில் கிடைக்கும் சூரியசக்தி மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்பட உள்ளது என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.