சரஸ்வதி புஷ்கரம் விழா பத்ரிநாத், கேதார்நாத்துக்கு ஆன்மிக சிறப்பு ரயில்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:உத்தரகண்ட் மாநில சுற்றுலா நிறுவன அதிகாரிகள் விரேந்திரசிங் ராணா, சுனில் ராஜு ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில், சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் வாயிலாக, பயணியர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, உத்தரகண்ட் சுற்றுலா கழகமும் மற்றும் இந்திய ரயில்வேயும் இணைந்து செய்துள்ளன. 16 நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக சிறப்பு ரயிலில், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகண்ட் மாநிலத்தின் பிற கோவில்களை தரிசிக்கலாம். இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி பெட்டியில், ஒருவருக்கு கட்டணம், 58,500 ரூபாய். போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவு, பயண காப்பீடு, மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல்களுக்கு, www.tour times.in என்ற இணையதளம் மற்றும் 73058 58585 என்ற மொபைல் போன் எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்