உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை செயலுக்கு ஐகோர்ட் அதிருப்தி

வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை செயலுக்கு ஐகோர்ட் அதிருப்தி

சென்னை,: 'அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்' என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்பு துறையின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.சென்னை, கோவை மாநகராட்சியில், சாலை பணிகளுக்கான டெண்டர்களை, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் வாதாடியதாவது: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்கு தொடர, மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி பெறப்படவில்லை. அனுமதி கோரி விண்ணப்பித்த போது, உள்ளூர் மொழிகளில் உள்ள 12,250 ஆவணங்களையும் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து, விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது. இதுவரை 1,500 பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பு செய்ய, 30 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை விரைவில் முடித்து, இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க, நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தை, மத்திய அரசு திருப்பி அனுப்பிய பின் தான், ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்பது தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை கூறுகிறது. இது, ஏற்புடையதல்ல. ஊழல் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் ஒரு சிறப்பு அமைப்பான லஞ்ச ஒழிப்பு துறை, அத்தகைய தேவைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் விரைவாக நகர்வதில்லை. ஆனால், மற்றவர்கள் மீதான வழக்குகள், 'வந்தே பாரத்' ரயில் போல வேகம் எடுக்கின்றன. இந்த நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில், லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக இல்லை என்பது, வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் வாயிலாக தெரிகிறது. மக்கள் நம்பிக்கையை பெற, முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை, லஞ்ச ஒழிப்பு துறை தீவிரமாக கருத வேண்டும். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்பதால், இந்த நீதிமன்றம் இன்னும் அதி தீவிரத்தைக் காட்ட வேண்டி உள்ளது. நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தன் வலுவை இழந்து விடும். எனவே, லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. விசாரணை, நவ., 10ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V GOPALAN
அக் 20, 2025 19:17

We pity on this Judge


Gajageswari
அக் 16, 2025 19:04

பெருந்தலைவர் காமராஜர் கூறியது. கூட்டு களவாணிகள்.


வல்லவன்
அக் 14, 2025 12:36

ஊழல்மணியிடம் பிடிபட்ட பல்லாயிரக்கணக்கான கோடிகள் 2021 ரெய்டின் போதே தி்முக மேலிடத்துக்கு சென்றுவிட்டதாக செய்தி அப்புறம் எப்புடி இந்த வழக்கு நடக்கும் கொள்ளையடித்தது கொள்ளைபோனது எல்லாமே பாவப்பட்ட மக்கள் பணம்


V Venkatachalam
அக் 14, 2025 11:46

வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மாதிரி ஒருத்தர் இந்தியாவுக்கு கண்டிப்பாக வேணும். ஹை கோர்ட் அதிருப்தி மற்றும் கவலைகள் காணாம போயிடும். ஊழல் பெருச்சாளிகள் தங்கள் வசமிருக்கும் திருட்டு சொல்வதையெல்லாம் தானாகவே கவர்மெண்டுகிட்டே குடுத்துட்டு கவர்மெண்டுகிட்டேயே வரமாட்டானுங்க.


என்னத்த சொல்ல
அக் 14, 2025 09:17

முன்னாள் அதிமுக அமைச்சர்மீது விசாரணைக்கு மத்தியஅரசு கண்டிப்பாக ஒத்துழைக்க வாய்ப்பே இல்லை. கூட்டணி பிச்சுக்கும்.. இது TVK தொண்டனுக்கு கூட தெரியும்..


SIVA
அக் 14, 2025 08:55

12500 பக்கங்களில் 1500 பக்கங்களை மொழி பெயர்பதற்குள் நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்டன, மீதியை மொழி பெயர்க்க எப்படியும் நாற்பது ஆண்டுகள் ஆகும் அப்புறம் பின் அதை படித்து முடிக்க பத்து ஆண்டுகள் ஆகும் அதுவரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறோம் ....


Barakat Ali
அக் 14, 2025 08:26

நல்லா கவனிச்சிருப்பா.... இருந்தாலும் ஏன் இப்படி ???? லஞ்ச ஒழிப்புத்துறை அஞ்சு, பத்து லஞ்சம் வாங்குறவனைத்தான் வளைத்துப் பிடிக்கும் ....


KOVAIKARAN
அக் 14, 2025 08:19

12500 பக்கங்களில், இதுவரை 1,500 பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ஆவணங்களை மொழி பெயர்ப்பு செய்ய, 30 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு நீதிமன்றம் நான்கு வார அவகாசம் கொடுத்துள்ளது. இதென்ன புதுக்கொள்ளையாக இருக்கறது? 11000 பக்கங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்ய ரூ. 30 லட்சமா? இப்போதுள்ள தொழிற்நுட்பத்தில், செயற்கை நுண்ணறிவால் - artificial intelligence ஒரே நாளில் ஒரு சில ஆயிரம் ரூபாய் செலவில் மொழி பெயர்ப்பு செய்யலாமே. நான் இதற்கு முன் தமிழில் எழுதிய இரண்டு புத்தகங்களை, கிரைம் திரில்லர் கதையை - 460 பக்கங்கள் + 430 பக்கங்கள் - ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொண்டு வருகிறேன். இது மிகவும் சுலபம். இந்த இரண்டு கதைகளுமே தினமலர் நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை இதழில், வரும் படிக்கலாம் வாங்க பகுதில் விமர்சனமாக வந்துள்ளது. எனவே இந்த ரூ. 30 லட்சம் செலவால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது எனபது என் கருத்து.


Appan
அக் 14, 2025 10:13

இது என்ன புதுசா இருக்குது ..லஞ்ச புகாரை மொழி பெயர்க்க ஊழல் ..இப்படியும் இருக்குமா ..?


Appan
அக் 14, 2025 08:18

வேலுமணி , செந்தில் பாலாஜி .....இப்படி பல அமைசர்கள் ஊழல் செய்து இன்னும் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளார்கள். இந்த அமைப்புகள் லஞ்ச ஒழிப்பு, சிபிஐ, சிவிசி ...இருந்தும் ஏதும் செய்ய முடியாமல் இருக்கிறது. சீனாவின் அபிரத பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம் லஞ்ச ஒழிப்பு.. சீனாவில் இது நாள் வரை சுமார் 140 அமைச்சர்கள், அரச அதிகாரிகள் ஊழலுக்கு தூக்கிலிட பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அவர்கள் பெரும் புகழுடன் ஆட்சி செய்கிறார்கள் . இந்த சமூக எண்ணங்கள் இருந்தால் எப்படி நாடு முன்னேறும்..நாட்டில் ஊழலுக்காக ஒரு புரட்சி தேவை. அப்போ தான் நாடு சுபிட்சம் வரும்...


K V Ramadoss
அக் 14, 2025 06:37

நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத்துறை, அரசாங்கங்கள் இவர்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா ? ஒரு லஞ்ச வழக்கை முடிக்க இத்தனை வருடங்களா? இப்படி இருக்க சாதாரண குடிமகன் மட்டிலும் உங்களுக்கு ஏன் அடங்கிப்போக வேண்டும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை