இன்று மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
சென்னை; தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தர மறுப்பதை கண்டித்து, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று நடக்க உள்ளது.'இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம், உரிமைகளை மீட்போம்' என்ற தலைப்பில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:தமிழகத்தின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. 'புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்திற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, தமிழக திட்டங்களை பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கிறார்.பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்து அத்துமீறல்கள்; யு.ஜி.சி., வாயிலாக மாநிலத்தின் கல்வி கட்டமைப்பை சிதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திராவிட, தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என, தமிழகத்தை வஞ்சித்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி அரசை, வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகின்றனர்.தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி,- வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என, அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும், மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாக, பா.ஜ., வை அண்டவிடாத தமிழக மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக, ஓரணியில் நிற்கும் தமிழகத்தை, வீழ்த்திவிட முயற்சிக்கிறது.வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம், தமிழகம் ஒன்றிணையும்; எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மத்திய அரசை கண்டித்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை கலெக்டர் அலுவலகம் முன் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.