தி.மு.க., அரசின் நாடகம் வெளிப்பட்டு விட்டது: முருகன்
சென்னை: தி.மு.க., அரசின் நாடகம் வெளிப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில், பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் ஓராயிரம். வேங்கை வயல் சம்பவத்துக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. பல பகுதிகளில் இரட்டை குவளை, இரட்டை சுடுகாடு, கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் என கொடுமை நிலவுகிறது. ஆனால், சாலைகளுக்கு ஜாதி பெயர் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய புரட்டு வேலையை தி.மு.க., அரசு தொடங்கி இருக்கிறது. தி.மு.க., அரசு வெளியிட்ட மாற்றுப் பெயர்கள் பட்டியலில், தமிழை வளர்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்திய நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர் இல்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் என யார் பெயரும் இல்லை. தமிழக வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என யார் பெயரும் உங்களுக்கு பிடிக்காது. ஆனால், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என தி.மு.க., கம்பெனி பெயர் மட்டும் வைக்க வேண்டுமா? ஜாதி பெயர் நீக்கம் என்ற பெயரில் தி.மு.க., அரசு அரங்கேற்ற திட்டமிட்டுள்ள நாடகம் வெளிப்பட்டு விட்டது. பார்க்கும் இடமெல்லாம் தன் தந்தை கருணாநிதி பெயர் இருக்க வேண்டும் என கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.