உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுயசான்று முறையில் வராத கட்டடம் உள்கட்டமைப்பு கட்டணம் உண்டு

சுயசான்று முறையில் வராத கட்டடம் உள்கட்டமைப்பு கட்டணம் உண்டு

சென்னை:'சுயசான்று முறைக்கு உட்படாத, 3,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதி கட்டணங்களை வசூலிக்க வேண்டும்' என, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சாதாரண வீடு கட்டும் பொது மக்களுக்கு உடனடி கட்டட அனுமதி வழங்க, அரசு முடிவு செய்தது. இதற்காக, 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி வரையிலான பரப்பளவு கட்டடங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் உடனடி ஒப்புதல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

குழப்பம்

கடந்த ஆண்டு ஜூலையில், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதில், பொது மக்கள் அதிக ஆர்வத்துடன் விண்ணப்பித்து, உடனடி கட்டட அனுமதி பெறுகின்றனர். இதில் கட்டட அனுமதி பெற, உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப, சதுர அடிக்கு, 15 முதல், 100 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து, வேறு எந்த கட்டணமும் இதற்கு வசூலிக்கப்படாது. இந்நிலையில், சுயசான்று முறைக்குள் வராமல், வழக்கமான நடைமுறைப்படி, 3,500 சதுர அடி வரை கட்டடம் கட்ட அனுமதி கோருவோருக்கு, எந்தெந்த தலைப்புகளில் கட்டணங்கள் வசூலிப்பது என்பதில் குழப்பம் எழுந்தது. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு: சுயசான்று முறைக்கு உட்படாத குடியிருப்பு மற்றும் பிற வகை கட்டடங்களுக்கு, உள்கட்டமைப்பு வசதிகள் கட்டணம், வளர்ச்சி கட்டணம், கட்டட உரிம கட்டணம், தொழிலாளர் நல நிதி வசூலிக்கலாம்.

உத்தரவு

இதில், 3,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம் வசூலிக்க அவசியமில்லை என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வகை கட்டடங்களுக்கும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணம், இது தொடர்பான தலைப்பில் வரும் பிற கட்டணங்களையும் வசூலிக்க வேண்டும். இதற்காக, ஆன்லைன் கட்டட அனுமதி சாப்ட்வேரில் உரிய மாற்றங்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை