| ADDED : ஜூலை 20, 2011 05:24 PM
தேனி: பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நில மோசடிகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் தயாரிப்பை தடுப்பதிலும் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை இனி இல்லை. மாறுதல் தேவைப்படுவோர், முன்பு தாசில்தார் அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இனி தாசில்தார், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.க்களிடமும் மனு தரலாம். விண்ணப்பம் பெற்றதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பட்டா வழங்கும் விபரம் குறித்து வாரந்தோறும் டி.ஆர்.ஓ., தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.