திருப்பூர்: 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றிபெறும்; விஜய் நல்லாட்சி வழங்குவார்' என, திருப்பூரில் செங்கோட்டையன் பேசினார்.த.வெ.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று நடந்தது. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றிவாகை சூடப்போகிறது என்பதை இந்த கூட்டத்தை பார்க்கும்போதே உணரமுடிகிறது. தமிழகத்துக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டும் தேவையில்லை. விஜய்தான் முதல்வராகவேண்டும் என்கிற உணர்வோடு, அனைவரும் கூடியிருக்கின்றனர்.த.வெ.க. கூட்டத்தை பார்த்து, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா என்று பலரும் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில், எந்த சக்தியாலும் த.வெ.கவை வெல்லமுடியாது.எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குப்பிறகு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற விஜய் வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில்முனைவோர், நுாற்றுக்கும்மேற்பட்டோர், த.வெ.க. வில் இணைந்தனர்.
'விஜய்தான் உண்மையான தளபதி'
செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ''திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. திருப்பூர், குப்பை நகராக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான உதவிகளை அரசு சரியான முறையில் செய்துதரவில்லை. 2026 தேர்தலில், 234 தொகுதிகளிலும் த.வெ.க வெற்றிவாகை சூடும்.பொங்கலுக்குள், முன்னாள் அமைச்சர்கள் பலர் த.வெ.க., வில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். விஜய் வாய் திறப்பதில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். அவர், சமயம் வரும்போது வாய்திறப்பார். படைக்கு தலைமை வகிப்பவர், வெற்றிபெற்று நாட்டை ஆள்பவர்தான் தளபதி; விஜய்தான் உண்மையான தளபதி. மற்றவர்களெல்லாம், வெட்டி தளபதி,'' என்றார்.