துணை முதல்வராக உதயநிதிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன
போடி:''அமைச்சரவை மாற்றத்தில் மாற்றம் யாருக்கு, ஏமாற்றம் யாருக்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார்,'' என, போடியில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்க கல்லுாரி பொன் விழாவில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, கல்லுாரி அஞ்சல் தலையை வெளியிட்டார்.பின், அவர் கூறியதாவது:அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. ஆனால், அவர் குறித்து விமர்சிக்கிறார் தமிழிசை. காங்., முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் இல்லை என்றால், தமிழிசையை யார் என்று கூட தெரியாது. அதை மறந்துவிட்டு உதயநிதி மற்றும் தி.மு.க., குறித்தெல்லாம் அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் உதயநிதி இளமை பருவத்தில் இருந்தே தி.மு.க., இயக்கத்திற்காக உழைத்தவர்; இளைஞர்களுக்கான வழிகாட்டியாக உள்ளார்.தமிழகத்தில் படிக்கும் போதே தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் பாடம் நடத்தும் முறையை உருவாக்கியுள்ளார்.உயர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இரண்டு கண்களாக கருதி முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.