உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடாதீர்; அமைச்சருக்கு வானதி அறிவுரை

பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடாதீர்; அமைச்சருக்கு வானதி அறிவுரை

சென்னை : ''இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து மதிப்பிடக்கூடாது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ஜ., வானதி: டி.சி.எஸ்., நிறுவனத்தின், சமூக பொறுப்பு நிதியில், அரசு ஐ.டி.ஐ.,க்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. அதை இப்போதும் தொடர வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை வேண்டும் என்கின்றனர்; நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்றனர். வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன் இருப்பதில்லை. படித்த இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும்.அமைச்சர் கணேசன்: படித்த இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காகவே, 'நான் முதல்வன்' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 42 அரசு ஐ.டி.ஐ.,க்கள் துவக்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்துடன் இணைந்து, ஐ,டி.ஐ.,க்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 239 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 2.49 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.சபாநாயகர் அப்பாவு: படித்த இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலம் தான், நான் முதல்வன் திட்டம்.வானதி: அந்த பாலத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.அமைச்சர் சிவசங்கர்: சமீபத்தில் பாம்பனில் கட்டப்பட்ட பாலம் போல் இல்லாமல், திராவிட மாடல் பாலம் சிறப்பாக, உறுதியாக இருக்கும்.வானதி: பாம்பன் ரயில் பாலம் என்பது, இந்தியாவில் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து துாக்கு பாலம். இந்திய தொழில்நுட்பத்தில், இந்திய பொறியாளர்களின் உழைப்பில் கட்டப்பட்டது. உங்கள் சித்தாந்தத்திற்காக, நமது பொறியாளர்கள், தொழிலாளர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது; பெருமைப்பட வேண்டும்.அமைச்சர் சிவசங்கர்: தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று பேசினீர்கள். ஆனால், தமிழகம் பின்தங்கியிருப்பது போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்கள் போல், உங்கள் நண்பர்கள் வெளியே பேசுகின்றனர். நீங்களும் தமிழகத்தை குறைத்துப் பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்து பேசவில்லை.வானதி: சட்டசபைக்கு உள்ளே எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதைவிட, எங்கள் கட்சிக்காரர்கள் வெளியே பேசுவதற்கு, அமைச்சர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எங்கும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை; பெருமைப்படுகிறோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balasubramanian Bala
ஏப் 11, 2025 08:40

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே தளங்களும் இந்திய மக்களின் உழைப்பால் வரிப்பணத்தால் உயர்ந்தவை, இந்திய மக்களின் பொது சொத்து அதன் வருமானம் இந்திய கஜானாவை நிரப்ப வேண்டும்.. உங்கள் பாஜக அரசு பதவியேற்றது முதல் இந்திய பொது சொத்துக்களை ரயில்வே விமானம் கப்பல் போக்குவரத்து துறைகளை தனியாரின் லாபத்து குத்தகை விற்றது தேச நலனுக்கு எதிரான செயல் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்


Gopala S
ஏப் 10, 2025 14:20

புதிய பாம்பன் பாலத்தை கட்டிய பொறியாளர்களில், தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளார்கள்.


S.kausalya
ஏப் 10, 2025 07:40

எங்க மாநிலத்திற்கு வந்து பாலம் கட்டி உள்ளீர்கள். சரி. ஆனா அதுக்கான கமிசன் எங்களுக்கு வர விடாமல் பண்ணிடீங்களே அதனால் தான் பேச வேண்டி உள்ளது


முக்கிய வீடியோ