உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் * மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் * மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை:'பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தாது. இதற்கு மாற்றாக, ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத, விரிவான திட்டத்தை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது' என, மத்திய குறு, சிறு மற்றும் தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும், பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை செய்யும்படி, தமிழக அரசு சார்பில், ஜன., 4ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்த திட்டம், ஜாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவாக ஆய்வு செய்து, திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்தது. அதன்படி, விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள தொழிலை செய்ய விரும்பும் எந்தவொரு நபரும், இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன் பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பை, 35 ஆக உயர்த்த வேண்டும். இதனால், தங்கள் குடும்ப வர்த்தகத்தை தொடரவும், அதை நன்கறிந்தவர்கள் மட்டுமே, இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெறவும் முடியும்.கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு, ஊராட்சி தலைவருக்கு பதிலாக, கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.இந்நிலையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தில் இருந்து, மார்ச் 15ம் தேதி வந்த பதிலில், பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை, தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை, தமிழக அரசு முன்னெடுத்து செல்லாது. சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ், தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத, விரிவான திட்டத்தை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்த உள்ள திட்டம், ஜாதி மற்றும் குடும்ப தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும், முழுமையான ஆதரவை அளிக்கும். இந்த திட்டம், கைவினைஞர்களுக்கு நிதியுதவி, பயிற்சி, வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை