உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்னாச்சு? ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்னாச்சு? ரூ.160 கோடியில் 11.50 லட்சம் சாதா மீட்டர் வாங்குது வாரியம்

சென்னை: தமிழகத்தில் 3.04 கோடி, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த, 'டெண்டர்' கோரியுள்ள நிலையில், 11.50 லட்சம் ஒரு முனை, மும்முனை சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம் துவக்கியுள்ளது. இதனால், எதற்காக இந்த வீண் செலவு என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகம் முழுதும் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்க, அனைத்து மின் இணைப்புகளிலும், 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விபரத்தை, ஊழியர்கள் கணக்கெடுக்கின்றனர். இதில், தவறுகள் நடக்கின்றன.எனவே, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மீட்டர் பொருத்தி, அதை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023 இறுதியில் டெண்டர் கோரப்பட்டது.

டெண்டர் ரத்து

அதில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை கோரியதாகக் கூறி, இந்தாண்டு ஜனவரியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பின், 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அவற்றை 93 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த பிப்ரவரியில் டெண்டர் கோரப்பட்டது.இதில், நிறுவனங்கள் பங்கேற்க, இம்மாத இறுதி வரை அவகாசம் உள்ளது.இந்நிலையில், தற்போது 160 கோடி ரூபாய் செலவில், ஒரு முனை பிரிவில் 8 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 3.50 லட்சம் மீட்டர்களும் வாங்க, தலா ஆறு நிறுவனங்களுக்கு பணி ஆணைகளை மின் வாரியம் சமீபத்தில் வழங்கியுள்ளது.ஏற்கனவே, ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதால், தற்போது வாங்கப்பட உள்ள மீட்டர்கள் வீணாகலாம் என்றும், அதற்கான செலவு தேவையற்றது என்றும் புகார் எழுந்துள்ளது.

அவகாசம்

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் தான், சாதா மீட்டர் கொள்முதல் குறைக்கப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் தொடர்பான சந்தேகங்களை நிறுவனங்கள் எழுப்புவதால், அதற்கு ஏற்ப டெண்டரில் பங்கேற்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதனால், டெண்டரில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து பணிகளை துவக்கி, அனைத்து இணைப்புகளிலும் மீட்டரை மாற்ற, ஓராண்டுக்கு மேலாகும். அதேசமயம், புதிய மின் இணைப்பு கேட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதற்கு மீட்டர் அவசியம். எனவே தான், ஒருமுனை மற்றும் மும்முனை பிரிவுகளில், 11.50 லட்சம் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஜூலை 06, 2025 11:38

ஸ்மார்ட் மீட்டர் சப்ளை டெண்டர் அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்டதாக செய்தி. சாதா மீட்டர் மின் திருட்டுக்கு எளிது என்பதால் உ.பி சின் கட்டிடங்களுக்கு மட்டுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 09:00

மேற்குவங்கத்தில் கூட ஸ்மார்ட் மீட்டர் 12 ஆண்டுகளுக்கு முன்பே முழுதுமாகப் பொருத்தப்பட்டு விட்டது .... தமிழகத்தில் அதிலும் பிசினஸ், கட்டிங் என்று பார்க்கிறார்கள் .....


Mani . V
ஜூலை 06, 2025 04:47

இது வரவிருக்கும் தேர்தல் செலவுக்கான கொள்ளையின் ஒரு பகுதிதான். பின்னர் ஸ்மார்ட் மீட்டர் வாங்கப் போகிறோம் என்று பலப் பல லட்சம் கோடியை கொள்ளையடிப்போம். துபாயில் பங்களா, கார் ரேஸ், ஐந்து கட்சி அமாவாசை 300 கோடியில் வீடு, இதெல்லாம் சும்மாவா வரும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை