சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கணக்கீட்டு படிவங்களை, 'ஆன்லைனில்' பூர்த்தி செய்ய, வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும், ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த, தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில், 'Search your name in the last sir' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில், 'பெயர் மூலம் தேடுதல்' அல்லது, வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில், தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம். பெயர் பயன்படுத்தி தேடும்போது, மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம். 'ஆன்லைன்' வழியே பூர்த்தி வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், ' Fill Enumeration Form' என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் 'e-sign' பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமக பதிவேற்றப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.