இளம் பெண், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
திருச்சி: காட்டுப்பகுதியில், இளம் பெண்ணுடன், வாலிபர் ஒரே கயிற்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்து சென்னை பைபாஸ் சாலையில், நெடுங்கூர் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில், நேற்று மாலை பெண்ணும், வாலிபரும் மரத்தில், ஒரே கயிற்றில் துாக்கிட்டு தொங்கியதை அங்கு சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுகனுார் போலீசார் விசாரணையில், அவர்கள், மணப்பாறை அருகே ராஜாளிகவுண்டன்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, 27, ஆனையூரை சேர்ந்த, 15 வயது பெண் என தெரிந்தது. அவர்கள் வந்த பைக் அங்கு சாய்ந்து கிடந்துள்ளது. அவர்கள் காதலர்களாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், அவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.