உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

விசாரணையில் வாலிபர் மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: 'சிவகங்கை மாவட்டத்தில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

நீதிபதி தலைமையில் விசாரணை தேவை

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகையை திருடியதாக வந்த புகாரை அடுத்து, அஜித்குமாரை திருபுவனம் போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது, காவலர் தாக்கியதில், அஜித்குமார் இறந்து விட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'ஜெய்பீம் படம் பார்த்தேன்; உள்ளம் உலுக்கியது' என, சினிமா விமர்சனம் எழுதிய, தி.மு.க., அரசின் முதல்வர் எங்கே இருக்கிறார்.தவறு செய்ததாக காவல் துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக எடுத்துக்கொள்ள கூடாது. தன் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை கூட, நிர்வகிக்க தெரியாத முதல்வருக்கு கண்டனம். அஜித்குமார் மரணம் குறித்து, முழு உண்மையை வெளிக்கொண்டு வர, மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்த வேண்டும். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும்.

காவல் துறையை சீர்திருத்துங்க

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காணவேண்டிய காவல் துறை, விசாரணை என்ற பெயரில், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதே, காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம். காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து, போலி கண்ணீர் வடிக்கும் முதல்வர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது, காவல் துறை வழியே மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.காவல் நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என, மேடையில் பேசுவதோடு, தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர, காவல் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் பதவி விலக வேண்டும்

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில், படுதோல்வி அடைந்துள்ள காவல் துறை, அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நான்கு ஆண்டுகளில், 28 பேர் போலீஸ் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோர், கொலை செய்யப்பட்ட போது, 'பேய் ஆட்சி செய்தால், பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை, இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.அவருக்கு மனசாட்சி இருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியதை போல், இப்போது பதவி விலக வேண்டும்.

தக்க நியாயம் பெற்று தர வேண்டும்

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: விசாரணை என்ற பெயரில், இளைஞரை காவலர்கள் இரண்டு நாட்களாக அடித்து துன்புறுத்தியதால், அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது, 'லாக் அப்' மரணம் என்ற சந்தேகம் எழுகிறது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் நிலையம் சென்றாலே, உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. காவல் துறையின் அராஜக போக்கிற்கு, மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயத்தை முதல்வர் பெற்றுத்தர வேண்டும்.

மூடி மறைக்கும் வேலை

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை மூடி மறைக்கும் வேலையில், காவல் துறையினரும், அந்தப் பகுதி தி.மு.க.,வினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. சிறு, சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளை, விசாரணை என்ற பெயரில் காவல் துறை கடுமையாக தாக்குவது, தி.மு.க., ஆட்சியில் அதிகரித்துள்ளது. அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் விடப்போவது இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.Isaac
ஜூன் 30, 2025 20:30

மாத்தி யோசிப்போம்


ராஜா
ஜூன் 30, 2025 19:50

காவல் நிலையம் இனிமேல் காவு நிலையம் என்று அழைக்கப்படுகிறது என்பதை இந்த அறிவிக்கை தெரிவிக்கிறது.


Gnana Subramani
ஜூன் 30, 2025 13:27

வழக்கமாக இது போல நடந்தால் சிபிஐ விசாரணை கேட்பார்களே. இப்போது ஏன் கேட்க வில்லை


தஞ்சை மன்னர்
ஜூன் 30, 2025 11:41

"" முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் "" அப்போதைய முதல்வர் பதவி விலகினார் என்றால் சரி விலகவில்லையே அப்புறம் ஏன் இந்த கேள்வி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 16:04

அவர் பதவி விலக வில்லையென்றுதானே இவர்களை தேர்தெடுத்தோம் ...முன்னால் முதல்வர் செய்ததை மீண்டும் திரும்ப செய்வதற்கு இந்த விடியல் அரசு எதற்கு ? எடப்பாடியை காப்பி அடித்து ஆட்சி நடத்துகிறாரா விடியல் ..


சிந்தனை
ஜூன் 30, 2025 09:33

இது மக்களாட்சி மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு துறைகள் இருக்கின்றன அதில் ஊழியர்கள் இருக்கிறார்கள் மக்கள் செய்தால் மக்கள் தவறு செய்தால் பெரிய தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன ஆனால் இந்த அரசு துறைகள் தவறு செய்தால் தண்டனை கண்துடைப்புக்காக கொடுக்கப்படுகிறது அரசு ஊழியர்களுக்கும் இரண்டு மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும் அவர்களுடைய தவறுகளுக்கு அப்பொழுதுதான் மக்களுக்கு நேர்மையாக வாழ்வதில் ஆர்வம் வரும் நம்பிக்கை வரும் அனைவரும் சிந்திப்போம்.


Svs Yaadum oore
ஜூன் 30, 2025 06:28

அ தி மு க ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவத்தில் பெருசா பொங்கிய ஆபாச சினிமா கூத்தாடிகள் கும்பலில் ஒருத்தன் கூட இப்போது காணோம் .....மொத்த கூத்தாடிகள் கும்பலும் இப்பொது எங்கே போனான் என்பது தெரியாது ....செத்தவன் மதத்தை பார்த்துதான் இங்குள்ள கூத்தாடிகள் கும்பல் பொங்கும் ....அது இங்குள்ள மக்களுக்கு புரியனும் .....இந்த விடியல் ஆட்சியில் போலீஸ் காவலில் இறந்தவர் எண்ணிக்கை மட்டும் 25 நபர்கள் .....ஆனால் விடியல் நெறியாளனுங்க கும்பல் இது பற்றி வாய் திறக்காது ...


raja
ஜூன் 30, 2025 06:24

அடித்து விரட்டாதவரை தமிழனுக்கு தமிழ்நாட்டுக்கு விடிவு இல்லை.


Mani . V
ஜூன் 30, 2025 04:22

"அப்பா" காவல்துறை உங்கள் பொறுப்பில்தானே இருக்கிறது? விசாரிக்க ஒரு முறை உண்டுதான். அதற்காக அடித்து கொலை செய்யும் அதிகாரத்தை அந்த ரௌடிகளுக்கு கொடுத்தது யார்?


Kasimani Baskaran
ஜூன் 30, 2025 03:35

திருடன் யார் என்று விசாரிக்க மட்டுமே உரிமை உள்ளேதே தவிர தாக்க காவல்துறைக்கு எங்கும் அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை. அதிகாரத்தை மீறி செயல்படும் காவல்துறை கண்டனத்துக்கு உரியது.


சமீபத்திய செய்தி