ஐஸ்கிரீம் கேக்கிற்கு கூடுதலாக ரூ.700 வசூல்: இழப்பீடு வழங்க சொமேட்டோவிற்கு உத்தரவு
சென்னை: 'ஐஸ்கிரீம் கேக்'கிற்கு கூடுதலாக 700 ரூபாய் வசூலித்த 'சொமேட்டோ' நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 7,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் தாக்கல் செய்த மனு: அண்ணா நகரில், 'ஹவ்மோர் ஐஸ்கிரீம்' என்ற தனியார் நிறுவன கிளை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்., 20ல், 'இத்தாலிய கசாட்டா ஐஸ்கிரீம் கேக்'கை 'சொமேட்டோ' வாயிலாக, ஆன்லைனில் ஆர்டர் செய்தேன்.ஐஸ்கிரீம் கேக் விலையாக, 1,182.36 ரூபாய் வசூலித்தனர். சொமேட்டோ 'ஆன்லைன்' செயலியில், கேக்கின் எம்.ஆர்.பி., எனும் அதிகபட்ச சில்லரை விலை 300 ரூபாய்.உடனே, சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு, எம்.ஆர்.பி.,யைவிட கூடுதல் விலை வசூலித்தது குறித்து புகார் அளித்தேன். ஐஸ்கிரீம் கேக் விற்ற நிறுவனத்திடமும் உண்மையான விலை குறித்து கேட்டேன்.எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலைக்கு, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு விற்கவில்லை என, தகவல் தெரிவித்தனர். பலமுறை புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலைக்கு விற்று, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனங்கள் மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் கவிதா கண்ணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சொமேட்டோ நிறுவனம் தரப்பில், 'தவறுதலாக எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலை வசூலிக்கப்பட்டு விட்டது. சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட்டது.'தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை திருப்பித் தரத் தயாராக இருந்தோம். ஆனால், புகார்தாரர் பெற மறுத்துவிட்டார். எனவே, இது சேவை குறைபாடு ஆகாது' என, தெரிவிக்கப்பட்டது. நேர்மையற்ற வணிகம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு: உணவுப் பொருளுக்கான எம்.ஆர்.பி.,யை விட கூடுதலாக 700 ரூபாய் வசூலித்தது நியாயமற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாடு.எனவே, பொருளை விற்ற, வினியோகம் செய்த நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 5,000 ரூபாய் இழப்பீடும், 2,000 ரூபாய் வழக்கு செலவு சேர்த்து, மொத்தம் 7,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.