அபுதாபியில் நடப்பட்டது பழமையான ஆலிவ் மரம்
துபாய் : லெபனான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 800 ஆண்டு பழமையான ஆலிவ் மரம், அபுதாபியில் நடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் வளர்ந்த 800 ஆண்டு பழமையான ஆலிவ் மரத்தை வேரோடு பெயர்த்து, அதன் சீதோஷ்ண நிலை உள்ளிட்டவை மாறாமல், பாதுகாக்கப்பட்ட பெரிய லாரியில் கொண்டு வந்து, அபுதாபியின் ராதட் நகரில் நடப்பட்டுள்ளது. 4 மீட்டர் உயரமும், 5 டன் எடையும் கொண்ட இந்த ஆலிவ் மரம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அபுதாபிக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டு அதன் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டது. மரம் தொடர்ந்து துளிர்த்ததால், தற்போது ராதட் பகுதியில், விமான நிலைய சாலையில் உள்ள மசூதி அருகே நடப்பட்டுள்ளது.
இந்த மரத்தை பாதுகாக்க, தாவரவியல் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மரம் இன்னும் 800 ஆண்டுகளுக்கு தழைத்து வளரும் என, பால் பெர்னாண்டஸ் என்ற தாவரவியல் வல்லுனர் தெரிவித்துள்ளார்.