| ADDED : நவ 10, 2025 03:13 PM
டெக்சாஸ்; அமெரிக்காவில் இந்திய மாணவி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆந்திராவில் பாபட்லா அருகே உள்ள கர்மிசேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா, நாகமணியின் மகள் ராஜ்யலக்ஷமி(23). விஜயவாடாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.பின்னர், கணினி அறிவியலில் மேல்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். டெக்சாஸில் பல்கலை. ஒன்றில் எம்எஸ் முடித்த அவர் வேலை தேடிக் கொண்டு இருந்தார். கடுமையான இருமல், சளியால் அவதிப்பட்டு வந்த ராஜ்யலக்ஷமி இதுகுறித்து சொந்த ஊரில் உள்ள தமது குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தார். நவ.9ம் தேதி மருத்துவரை பார்க்க உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார்.இந் நிலையில், நேற்றிரவு அவர் தமது அறையில் உயிரிழந்தார். அவரின் மரண செய்தியை அறிந்த உறவினர்கள் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். இதுகுறித்து டெக்சாஸ் டென்டனில் உள்ள அவரது உறவினர் சைதன்யா கூறியதாவது; உயர் படிப்புக்காக நிதி உதவி திரட்டும் நடவடிக்கையில் மும்முரமாக அவர் ஈடுபட்டு இருந்தார். கடந்த 2 நாட்களாக கடுமையான இருமல், நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார்.அவரை பார்க்க நண்பர்கள் அவரின் இருப்பிடத்துக்குச் சென்ற போது ராஜ்யலஷ்மி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்று கூறினார்.சொந்த ஊரில் இருக்கும் ராஜ்யலக்ஷமியின் பெற்றோர் அவரின் மரண செய்தியை அறிந்த அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தமது மகளின் உடலை சொந்த ஊர் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.